Published : 17 Jan 2018 07:57 PM
Last Updated : 17 Jan 2018 07:57 PM

குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு ஜெ.அன்பழகன் வழக்கு: ஜன.23-ல் விசாரணை

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களின் விற்பனையை அனுமதித்தது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 23-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களின் விற்பனையை அனுமதித்தது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில் கூறியிருப்பதாவது:

''குட்கா வழக்கில் மத்திய கலால் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் டெல்லியில் உற்பத்தியாகும் குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது என்றும் ஹாவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இதுவரை 55 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், குட்கா ஊழலில் யார் யார் ஈடுபட்டவர்கள் குறித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு டிஜிபி அனுப்பிய ஆவணங்கள் கடந்த நவம்பர் வேதா நிலையத்தில் நடத்திய சோதனையின்போது சசிகலா அறையிலிருந்து கைப்பற்றப்பற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் எம்.டி.எம். குட்கா நிறுவன மேலாளர் மாதவராவ் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 56 லட்சம் லஞ்சமாக கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வருமான வரித்துறை பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்து வழக்கை நியாயமான விசாரணை நடத்த சிபிஐக்கு மாற்றி உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நிலையில் விசாரணைக்கு எட்டப்படாததால், வழக்கை ஜனவரி 23-ம் தேதி மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x