Published : 09 Jan 2018 10:09 PM
Last Updated : 09 Jan 2018 10:09 PM

செய்தி எதிரொலி: துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கினார் நாதுராம்

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் நாதுராம் தனது முகநூலில் துப்பாக்கியுடன் இருக்கும் படம் வெளியிட்டது செய்திகளில் வெளியானதை அடுத்து தனது படத்தை முகநூலில் இருந்து நீக்கியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் எனபவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டு திருடப்பட்ட இந்த வழக்கில் 4 வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். நாதுராம் மற்றும் அவரது கூட்டாளி தினேஷ் சௌத்ரி ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றனர்.

இதில் நாதுராமுக்கு ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்கு உண்டு. அங்குள்ள உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த நாதுராமுக்கு கொள்ளை அடிப்பதே பிழைப்பு. அவர்கள் இருவரை பிடிக்கச் சென்ற தனிப்படையினர் நாதுராமின் தந்தை உறவினர்கள் உள்ளிட்டோரை பிடித்து வந்தனர். பின்னர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பெரிய பாண்டியன், முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை நாதுராமையும் தினேஷ் சௌத்ரியையும் பிடிக்க ராஜஸ்தான் சென்றது.

அப்போது ஏற்பட்ட மோதலில் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார். அது இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு என்று பாலி மாவட்ட எஸ்பி உள்ளிடோர் சொன்னாலும், பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்த குண்டு இதுவரை கண்டு பிடிக்கப்படாததால் யார் பெரிய பாண்டியனை சுட்டது என்பதில் இதுவரை குழப்பம் நீடிக்கிறது.

இந்த வழக்கில் பெரிய பாண்டியனை நாதுராம் தான் சுட்டார் என முனிசேகர் புகார் அளித்திருந்தார். சுட்டுவிட்டு நாதுராமும் உடன் இருந்தவர்களும் தப்பிச் சென்றனர். இதுவரை நாதுராம் பிடிபடவில்லை. தினேஷ் சௌத்ரி பிடிபட்டார் அவர் ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னைக்கு அவரை அழைத்துவரவில்லை.

நாதுராம் தலைமறைவாக இருப்பதாக கூறினாலும் அவரை பிடிக்க ராஜஸ்தான் போலீஸார் சிரத்தை எடுப்பதாக தெரியவில்லை. நாதுராமும் தைரியமாக முகநூலில் வளம் வருகிறார். நாதுராம் ஜாட் என்ற பெயரில் முகநூலில் கணக்கு வைத்துள்ள நாதுராம், தனது தொழிலாக கிரிமினல் செட்டில்மென்ட் என்று கட்டப்பஞ்சாயத்தையும் ஒரு தொழிலாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நாதுராம் தனது முகநூலில் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை போட்டிருந்தார். இது பற்றிய செய்தி தமிழக செய்திதாள்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு ஆய்வாளரின் மரணத்திற்கு காரணமான கொள்ளையன் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற படத்தை தைரியமாக முகநூலில் பதிவு செய்து உலா வருகிறார்.

அவரை கைது செய்யாமல் ராஜஸ்தான் போலீஸார் உலாவ விட்டுள்ளதையே இது காட்டுவதாக அமைகிறது என்ற கருத்து எழுந்தது. இது ராஜஸ்தான் போலீஸாருக்கும் தமிழக போலீஸ் அதிகாரிகள் மூலமாக முகநூல் பதிவு விவகாரம் கொண்டுசெல்லப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நாதுராம் தனது முகநூலில் பதிவு செய்திருந்த துப்பாக்கியுடன் இருக்கும் படத்தை அகற்றியுள்ளார். தனது மகன் படத்தை முகநூலில் டைம்லைன் பகுதியில் வைத்துள்ளார். முகநூலில் செயல்படும் ஒரு நபரை சைபர் பிரிவு போலீஸார் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதும் தமிழக போலீஸாரை யோசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் நாதுராமை பிடிக்க வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர் மற்றும் தலைமை காவலர் அந்தஸ்த்தில் உள்ள திறமை வாய்ந்த போலீஸார் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் விரைந்துள்ளது. விரைவில் அவர்கள் நாதுராமை பிடிக்கக்கூடும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x