Published : 13 Jan 2018 10:35 AM
Last Updated : 13 Jan 2018 10:35 AM
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்களுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 29-12-2014-ம் தேதி இரவு காந்தி நகரில் டியூஷன் முடிந்து வீட்டுக்கு மிதிவண்டியில் திரும்பிக்கொண்டிருந்தார். திருக்கோவிலூர் சாலையில் சென்றபோது, மிதிவண்டி மீது ஆட்டோ மோதியதில் அந்த மாணவி கீழே விழுந்தார். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய 2 இளைஞர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி மாணவியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரில் வசிக்கும் பச்சைமுத்து மகன் வினோத்(26), அஸ்வின்(20) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் வினோத் என்பவர் வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், வினோத் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு 30 ஆண்டுகள் மற்றும் ஒரு மாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT