

சென்னை: செய்தியாளர்களிடம் கூடுதல் டிஜிபி அருண் கூறியதாவது. மயிலாடுதுறைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆளுநர் வந்தபோது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வந்தவர்கள் ஒன்றுகூடி நின்றார்கள். ஆளுநரின் வாகனம் அருகில் வந்தபோது போராட்டக்காரர்கள் அருகில் வந்துவிடக்கூடாது என்பதற்காக 2 போலீஸ் பேருந்தை நிறுத்தி மறித்தோம்.
ஆளுநருடன் 14 கான்வாய் வாகனங்கள் வந்தன. இந்த வாகனங்கள் சென்ற பின்னர் வந்த தனியார் வாகனம் ஒன்றின் மீதுதான் ஒரு கருப்புக் கொடி விழுந்தது. இதுதான் உண்மையில் நடந்த சம்பவம்.
கற்கள், கட்டையால் ஆளுநர்தாக்கப்பட்டார் என்பது உண்மைக்கு மாறான தகவல். அதே போல, புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதும் தவறான செய்தி. இந்த சம்பவம் நடந்தது ஏப்ரல் 18-ம் தேதி என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நடந்தது ஏப்ரல் 19-ம் தேதி.
இந்த சம்பவம் தொடர்பாக விஏஓஅளித்த புகாரின் பேரில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள். இதுவரை 53 சாட்சியங்களை விசாரித்துள்ளோம். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். புலன் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.