Published : 14 Jan 2018 09:39 AM
Last Updated : 14 Jan 2018 09:39 AM

நல்ல ஆட்சியுடன் தமிழகத்துக்கு வழி பிறக்கும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல, நிச்சயமாக ஒரு நல்ல ஆட்சியுடன் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் வழி பிறக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தை பிறந்தால் வழி பிறக்கும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகியைக் கொண்டாடுகிறோம். பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு பிடித்துள்ள சனியனையும் கழிக்கும் நிலை விரைவில் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். தை பிறந்தால் வழி பிறக்கும். எனவே, நிச்சயமாக ஒரு நல்ல ஆட்சியுடன் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் வழி பிறக்கும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் அமர்ந்து பேசி, இதை சரிசெய்ய வேண்டும். நீதிபதிகளால் தீர்க்க முடியாவிட்டால், குடியரசுத் தலைவர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும்.

விரைவில் திமுக ஆட்சி வந்ததும், கருணாநிதி எந்த எண்ணத்துடன் பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தாரோ, அதே நிலை மீண்டும் கொண்டு வரப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக கொளத்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற ஸ்டாலின், கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் பொருட்களை வழங்கினார். அவர் பேசும்போது, “நான் முதல்வராக வருகிறேனோ இல்லையோ, இத்தொகுதியைப் பொறுத்தவரை நான் என்றைக்கும் உங்கள் முதல் குடிமகனாக, முதல் காவலனாக இருப்பேன். தமிழகத்தைக் காப்பாற்ற, தமிழகத்துக்கு ஒரு விடிவு காலத்தை உருவாக்க, மக்களுக்கு தேவையான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த புத்தாண்டு, பொங்கல் விழாவில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x