Last Updated : 26 Oct, 2023 04:01 PM

 

Published : 26 Oct 2023 04:01 PM
Last Updated : 26 Oct 2023 04:01 PM

நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட உதயநிதி பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நெல்லை நகரில் அமைச்சர் உதயநிதியை வரவேற்று வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத பிளக்ஸ் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றக் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை வருகையை ஒட்டி, நெல்லை நகர் முழுவதும் அனுமதி பெறாமல் திமுகவினர் பெரிய அளவில் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி நெல்லை நகரில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தனபால் அமர்வில் இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் நெல்லை மாநகராட்சி வழக்கறிஞரிடம் பிளக்ஸ் பேனர்கள் வைக்க முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவ்வாறு அனுமதி பெறவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நெல்லை நகர் பகுதிகளில் முறையாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை இன்றைக்குள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x