Published : 11 Jan 2018 09:33 AM
Last Updated : 11 Jan 2018 09:33 AM

பொங்கல் பண்டிகைக்காக மக்கள் நலன்கருதி ஜன.17 வரையாவது பஸ்களை இயக்க வேண்டும்: தொழிற்சங்கங்களுக்கு நீதிபதிகள் வேண்டுகோள்

பொங்கல் பண்டிகைக்காக மக்களின் நலன்கருதி வரும் ஜன.17-ம் தேதி வரையாவது பஸ்களை இயக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தொழிற்சங்கங்கள் தரப்பில் பிரகாஷ், என்ஜிஆர் பிரசாத், ஜார்ஜ் வில்லியம்ஸ், சி.கே.சந்திரசேகர், ப்ரீத்தா ஆகியோர் ஆஜராகினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:

அரசு தலைமை வழக்கறிஞர் : இன்னும் 4 நாட்களில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்படும். இதற்காக ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ. 750 கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

தொழிற்சங்க வழக்கறிஞர்கள்: இது ரூ.7 ஆயிரம் கோடி பிரச்சினை. வெறும் ரூ. 750 கோடியை ஒதுக்குவது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகாது.

நீதிபதிகள்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க இந்த நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு குறிப்பிட்ட காலத்துக்குள் அதை வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால் இப்போது இந்த பிரச்சினை வந்திருக்காது. வெறும் 0.13 காரணிதான் பிரச்சினை. பொங்கல் பண்டிகை நெருங்குவதை மனதில் வைத்துக்கொண்டு இந்த பிரச்சினைக்கு இருதரப்பும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஊதிய உயர்வை முதலில் ஏற்றுக்கொண்டு உடனடியாக பணிக்கு திரும்புங்கள்.

தொழிற்சங்க வழக்கறிஞர்கள்: தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இதுதொடர்பாக ஆலோசித்துவிட்டு அவர்களின் கருத்தை தெரிவிக்கிறோம்.

(இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மீண்டும் நடைபெற்றது)

தொழிற்சங்க வழக்கறிஞர்கள்: 2.44 காரணி ஊதிய உயர்வை நிறுத்தி வைத்துவிட்டு, இது தொடர்பாக அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால் நாங்களும் உடனடியாக பணிக்கு திரும்புகிறோம்.

அரசு தலைமை வழக்கறிஞர் : இந்த ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது சாத்தியமில்லாத ஒன்று.

தொழிற்சங்க வழக்கறிஞர்கள்: எங்களி்ன் நிபந்தனையை அரசு ஏற்காவிட்டால் போராட்டத்தை வாபஸ் பெற இயலாது. இதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

நீதிபதிகள்: பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. இந்த நேரத்தில் போராட்டம் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜன.17-ம் தேதி வரையாவது பஸ்களை இயக்க வேண்டும். இது தொடர்பாக தொழிலாளர்கள் மனசாட்சியுடன் யோசிக்க வேண்டும். இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைக்கிறோம். அப்போது தொழிற்சங்கங்கள் நல்ல முடிவுடன் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x