ஆவடி அருகே மின் ரயில் தடம் புரண்ட சம்பவம்; ரயில் ஓட்டுநர் பணியிடை நீக்கம்: 3 பேர் கொண்ட குழு விசாரணை தொடக்கம்

ஆவடி ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட மின்சார ரயில்.
ஆவடி ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட மின்சார ரயில்.
Updated on
1 min read

ஆவடி அருகே அண்ணனூர் ரயில்வே பணிமனையில் இருந்து 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில், சென்னை கடற்கரைக்கு பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக ஆவடிரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையை நோக்கி நேற்று முன்தினம் அதிகாலை வந்து கொண்டிருந்தது.

இந்த ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்காமல், அங்கிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு சென்றுதடம் புரண்டது. இதில் முன்பகுதியில் இருந்த 4 பெட்டிகள் தடம் புரண்டு, 2-வது இருப்புபாதையில் சாய்ந்தன. இந்த ரயிலில் பயணிகள் இல்லாததால், உயிரிழப்புதவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருப்புப்பாதைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று முன்தினம் இரவு7.30 மணிக்கு அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, ரயில் சேவைதொடங்கியது. இந்த விபத்துக்கு ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவம் காரணமாக, அந்த மின்சார ரயில் ஓட்டுநர் ரவி (58) பணியிடை நீக்கம்செய்யப்பட்டார். இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

மின்சார ரயில் தடம் புரண்ட சம்பவம் காரணமாக, அந்த ரயில் ஓட்டுநர் ரவி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும்,ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரி,இயக்கவியல் பிரிவு அதிகாரி,சென்னை ரயில்வே கோட்ட கூடுதல்மேலாளர் ஆகிய 3 பேர் கொண்டகுழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஓட்டுநர், கார்டு, ரயில் நிலைய அதிகாரி, சிக்னல் பிரிவு அதிகாரி, ஊழியர்களிடம் விசாரணைநடத்தப்படும். இதன்பிறகு, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஓட்டுநர் மீது தவறு இருந்தால்,அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கைஎடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in