

சென்னை: திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மாடுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்தால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித் துள்ளார்.
சென்னை மாநகரப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்பொதுமக்களை முட்டி காயப்படுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம், திருவல்லிக்கேணி பகுதியில் கஸ்தூரி ரங்கன் (65) என்ற முதியவரை மாடு முட்டியதில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதைத்தொடர்ந்து மாநகராட்சிப் பணியாளர்கள், திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த 2 நாட்களாக சாலையில் சுற்றிய 16 மாடுகளைப் பிடித்து, பராமரிப்பு மையத்தில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவல்துறையுடன் இணைந்து மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில், பூக்கடை பகுதியில் 120 மாடுகள், பழைய வண்ணாரப் பேட்டையில் 3, புளியந்தோப்பில் 48, அண்ணாநகரில் 269, கொளத்தூரில் 12, கோயம்பேட்டில் 513, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்பகுதியில் 367, கீழ்ப்பாக்கத்தில் 95, அடையாறில் 177, தியாகராயநகரில் 145 என மாநகரம் முழுவதும் 1,986 மாடுகள் சாலையில்சுற்றித் திரிவதாகக் கண்டறிந் திருக்கிறோம்.
மாடுகளைப் பிடிக்கச் சென்றால், மாநகராட்சி பணியாளர்களை மிரட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த பிரிவின் கீழும், அரசு அலுவலரை பணி செய்ய விடாமல்தடுத்ததற்காகவும் காவல்நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மாடுகளுக்கு அகத்திக் கீரை போன்றவற்றை கொடுக்கும் தன்னார்வலர்கள், உண்மையில் நல்ல காரியம் செய்வதாக இருந்தால், அந்த மாடுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.