Published : 11 Jan 2018 09:30 AM
Last Updated : 11 Jan 2018 09:30 AM

ஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி: மதுசூதனனுக்கு வைகைச்செல்வன் ஆதரவு - ஜெயக்குமாருக்கு எதிராக போர்க்கொடி

ஆர்.கே.நகரில் தனது தோல்விக்கு காரணமான அமைச்சர் டி.ஜெயக்குமார், வடசென்னை எம்.பி. வெங்கடேஷ்பாபு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு நேற்று முன்தினம் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார். ஏற்கெனவே தினகரன் ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அமைச்சருக்கு எதிராக மதுசூதனன் போர்க்கொடி உயர்த்தியுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய மதுசூதனன், ‘‘முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ்ஸுக்கு நான் கடிதம் எழுதினேனா இல்லையா என்பது அவர்கள் இருவருக்கும் தெரியும். அது உள்கட்சி விவகாரம். என்னால் கட்சிக்கு எந்த களங்கமும் வராது’’ என்றார்.

இதற்கிடையே, மதுசூதனனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘மதுசூதனன் அதிமுக அவைத் தலைவர் மட்டுமல்ல, கட்சியின் மூத்த தலைவர். எனவே, அவர் கடிதம் எழுதியது உண்மையெனில் அவரது குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது கட்சியின் தோல்விக்கு காரணம் என யார் மீதாவது புகார் வந்தால் தீர விசாரித்து உடனடியாக கட்சியை விட்டு நீக்கி விடுவார். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியை வைத்து அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது’’ என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், ‘‘முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் உலக மகா நடிகர்கள். மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டதுதான் அதிமுக தோல்விக்கு காரணம். துரோகம் செய்தவர்கள், விசுவாசத்தைப் பற்றி பேசுகின்றனர்’’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x