தமிழகத்தில் ஒரு மாதத்தில் 1,000 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் ஒரு மாதத்தில் 1,000 பேருக்கு டெங்கு பாதிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சலால் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கொசுக்கள் மற்றும் பருவகால மாற்றத்தால் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் பரவலை தடுக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்று ஆய்வு மையங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த ஆண்டில் இதுவரை 5,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 550 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், சுத்தமான நீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், இன்னும் 2 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும்.

வீடுகளை சுற்றிலும் உடைந்த பானை, தொட்டி, டயர், டியூப் போன்ற பயன்படுத்தப்படாத பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து, அப்புறப்படுத்த வேண்டும். கொசு ஒழிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in