Published : 07 Jan 2018 04:53 PM
Last Updated : 07 Jan 2018 04:53 PM

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் துணை நிற்கும்: திருநாவுக்கரசர்

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு காங்கிரஸ் துணை நிற்கும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று (ஞாயிறு) வெளியிட்டுள்ள அறிக்கையில்‘‘

‘‘அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2.57 சதவீத ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4ம் தேதி போக்குவரத்து அமைச்சருடன் தொழிற்சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மேற்கண்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்ற கோரிக்கை மட்டும் தொடரும் என்றும் 2.57 சதவீத ஊதிய உயர்வுக்கு பதிலாக 2.44 சதவீத ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க முடியாது என்றும் அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அரசுக்கும், தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. அதைத் தொடர்ந்து பெரும்பான்மை உறுப்பினர்களை உள்ளடக்கிய சுமார் 14 தொழிற்சங்கத்தினர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் மற்றும் சிறு வியாபரிகளும் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இதேநிலை நீடித்தால் பொங்கல் பண்டிகை நன்னாளில் சொந்த ஊர் செல்லும் அனைவரும் மிகுந்த பாதிக்கப்படுவார்கள். இதன்மூலம் தனியார் பேருந்து நடத்துபவர்கள் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் அடிக்க அரசு வழிவகுத்து விடக் கூடாது.

எனவே, அரசு சுயகவுரவம் பார்க்காமல் தொழிற்சங்கத் தலைவர்களையும் தொழிலாளர்களையும் அடக்க ஒடுக்க நினைக்காமல் அவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x