Published : 19 Oct 2023 11:32 AM
Last Updated : 19 Oct 2023 11:32 AM

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: மருத்துவக் காரணங்களை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப் படம்.

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சிறையிலிருக்கிறார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாகக் குணமடையாத சூழலில், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, இன்று விசாரணைக்கு வந்தபோது, `மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது’ எனக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x