Published : 17 Jan 2018 10:02 AM
Last Updated : 17 Jan 2018 10:02 AM
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காணும் பொங்கல் நாளை கொண்டாடும் விதமாக ஒரு படகில் நேற்று காலை கடலுக்குள் சென்றுள்ளனர். ஆறுகாட்டுத்துறையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்றபோது சன்னதி கடல் என்ற பகுதியில், கரையில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் படகு தரை தட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மீனவர்கள் தப்பிப்பதற்காக கடலில் குதித்துள்ளனர்.
இதில் 10-க்கும் மேற்பட்டோர் நீந்தி கரை சேர்ந்தனர். அப்பகுதி சேறும், சகதியுமாக இருந்ததால், அதில் 10 பேர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த, கடலோர காவல் நிலையத்தினர் மற்றும் மீனவர்கள் கடலில் சிக்கிய 10 பேரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், பிரவீன்குமார்(19), யோகேந்திரன்(18), கனிஷ்கர்(18), பரத்(16), ராஜாமணி(18) ஆகிய 5 மீனவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டனர் என்பது தெரியவந்தது. இதில், பிரவீன்குமார், கனிஷ்கர், ராஜாமணி ஆகியோர் ஐடிஐயும், யோகோந்திரன் கேட்டரிங்கும், பரத் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தினர் விசாரணை நடத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT