

ஈரோடு: சென்னிமலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது, தமிழக அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னிமலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்திருந்தால், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காது.
தமிழக அரசின் தோல்வியை இது வெளிப்படுத்துகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என சிலர் பேசி வருகின்றனர். ஆனால், சனாதன தர்மத்தால் தான் இந்த நாடு முன்னேறிக் கொண்டு இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெறவில்லை.
மாறாக, இலங்கையில் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், படகு வாங்க ரூ. 1.60 கோடியை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. நாகை மீனவர்கள், கடற்கொள்ளையர் களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். இதில், தமிழகத்தில் இருந்தும் பாஜக எம்பிக்கள் வெற்றி பெற்று செல்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.