

நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரிக்க முதற்கட்ட நடவடிக்கையாக சிறப்பு குழு அமைக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா தெரிவித்தார்.
திருச்செங்கோடு அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக எழுந்த புகாரில் இடைத்தரகர் லோகாம்பாள் மற்றும் அரசு பெண் மருத்துவர் அனுராதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச. உமா செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய எந்த வன்முறையையும், குற்றச்செயல்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டார். எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக பொதுமக்களிடம் இருந்து ஒரு துருப்பு சீட்டு போல ஒரு தகவல் கிடைத்தது.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர், மூன்றாவது பிரசவத்துக்காக வரும் பெண்களை மூளைச்சலவை செய்து குழந்தையை இடைத்தரகர்கள் மூலமாக விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த தகவல் முழுவதும் உண்மை என்று கண்டறியப்பட்டது. உடனடியாக உயர் அதிகாரிகளிடம் இது குறித்து கலந்தாலோசித்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பெண் மகப்பேறு மருத்துவருக்கு இச்செயலில் தொடர்பு உள்ளதற்கான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றது. அதன் பேரில் அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் மருத்துவரின் இரண்டு கிளினிக் வைத்து நடத்துகிறார். அவர் மகப்பேறு மருத்துவர் என்பதால் மகப்பேறு, கருக்கலைப்பு சம்பந்தமாக அவரது கிளினிக்கை யாராவது அணுகி இருக்கலாம். தடயங்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி ஆணைக்கிணங்க சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மேற்பார்வையில் அந்த இரண்டு மருத்துவமனைகளுக்கும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன. இக்குற்றம் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் உள்துறை செயலர்களிடம் விரிவாக ஆலோசனைகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்ட நடவடிக்கையாக இதற்காக சிறப்பு குழுக்களை அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
இடைத்தரகரை விசாரித்ததில் அந்த அரசு மருத்துவர் கருக்கலைப்பு செய்ய வந்த பெண்ணை வற்புறுத்தி குழந்தை பெற வைத்து அந்த குழந்தையை விற்பனை செய்ததாகவும், மூன்றாவது பிரசவத்துக்காக வரும் ஏழைப் பெண்ணை மூளை சலவை செய்து அக்குழந்தையை விற்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஊர்ஜிதமாகியுள்ளது. குழந்தையை தத்து கொடுப்பதற்கு ரத்த உறவாக இருக்க வேண்டும், வருவாய் கோட்டாட்சியரின் சான்றிதழ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருக்கும் போது அவற்றை மீறி இந்த அரசு மருத்துவர் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.
சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி அதற்கான குழு அமைக்கப்பட்டு, விரைவில் பிரச்சினை குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்றார்.