Published : 20 Jan 2018 11:29 AM
Last Updated : 20 Jan 2018 11:29 AM

147 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய ஆங்கிலேய கப்பல்: இலங்கை கடலில் கண்டுபிடிப்பு!

இலங்கையில் உள்ள காலி துறைமுகம் அருகே 147 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய ரங்கூன் தபால் சேவை கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராயல் மெயில் நிறுவனம் (ஆர்.எம்.எஸ்) இங்கிலாந்தில் 1516-ம் ஆண்டு முதல் தபால் சேவை அளித்து வருகிறது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி சார்பாக ராயல் மெயில் நிறுவனம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தகவல் பரிமாற்ற வசதிக்காக கப்பல் மூலம் தபால் சேவையை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக 1815-ம் ஆண்டு இலங்கையில் கொழும்பு, காலே, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய 6 இடங்களில் அஞ்சல் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து 1838 ம் ஆண்டு கொழும்புக்கும் காலிக்கும் இடையே குதிரை வண்டி தபால் சேவையும் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஆர்.எம்.எஸ். ரங்கூன் என்ற தபால் சேவை கப்பல், 1.11.1871-ல் இலங்கையின் காலே துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது. இந்நிலையில், 147 ஆண்டுகளுக்குப் பிறகு காலே துறைமுகத்திலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் 25 மீட்டர் ஆழத்தில் ஆர்.எம்.எஸ்.ரங்கூன் கப்பலின் நீராவி பகுதி, புரோப்பல்லர் உள்ளிட்ட பாகங்கள் கிடப்பதை இலங்கையின் கடல்சார் தொல்பொருள் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கடலின் ஆழம் காரணமாக. கப்பலின் பெரும் பகுதி மணலால் மூடப்பட்டும், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டைனமைட் மீன்பிடி முறை காரணமாக பெருமளவிலான பாகங்கள் சேதமடைந்தும் கிடக்கின்றன. இக்கப்பலை ஆய்வு செய்யும் பணியில் இலங்கையின் கடல்சார் தொல்பொருள் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கப்பல் 1863-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சமுத்ரா சகோதரர்கள் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இதன் நீளம் 89.85 மீட்டர், அகலம் 11.61 மீட்டர் மற்றும் ஆழம் 5.36 மீட்டர் ஆகும். 1,776 டன் எடையுள்ளது. நீராவி மூலம் இயங்கிய இக்கப்பல், ஒரு மணி நேரத்துக்கு 12 நாட்டிக்கல் மைல் வேகத்தில் பயணிக்கும் திறன்மிக்கதாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x