Published : 24 Jan 2018 11:42 AM
Last Updated : 24 Jan 2018 11:42 AM
பெரும்பாலான சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் மக்களின் மனநிலையை மாசுபடுத்துவதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
நெல்லையில் மனநலம் குன்றிய 60 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். பின்னர், இந்த வழக்கில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பெருகக் காரணம்? இந்தக் குற்றங்களில், கடந்த 10 ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை விகிதம்..? என்பன உட்பட 25 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி என். கிருபாகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், தன்னையும், இந்த வழக்கில் சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்தார். மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலாத்காரம் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. சமீப காலமாக, அனைத்து இடங்களிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இன்றைய சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் மனிதர்களின் மனநிலையை மாசுபடுத்துகின்றன என்றார். பின்னர், விசாரணையை பிப். 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT