மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்
Updated on
1 min read

செங்கல்பட்டு: தமிழகத்தின் செங்கல்பட்டு - மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடியான தணிகாவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் அவரது வலது கை மற்றும் வலது கால் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

ரவுடி தணிகாவை சென்னையில் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை காவல் துறையினர் அழைத்து சென்றபோது தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். அதனால் அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். அவருக்கு தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி தணிகா மீது திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த அவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து சென்னையில் பதுங்கி இருந்த அவரை நேற்று தனிப்படை பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த சூழலில் அவர் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். அப்போதுதான் அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாமண்டூர் அருகே நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in