Published : 18 Jan 2018 11:33 AM
Last Updated : 18 Jan 2018 11:33 AM

மதுரையில் 10-வது உலக தமிழ் மாநாடா?- தமிழக அரசு ஆலோசிப்பதாக  தகவல்  

மதுரையில் 10வது உலக தமிழ் மாநாடு நடத்த, தமிழக அரசு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

உலக தமிழர்களையும், தமிழ் மொழி ஆராய்ச்சிகளையும் ஒருங்கிணைக்கவும், தமிழ் பண்பாடு, மொழி, கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தவும் உலக தமிழ்மொழி மாநாடுகள் நடத்தப்படுகிறது. இதுவரை ஒன்பது உலக தமிழ்மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

1966-ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் முதல் உலக தமிழ் மாநாடு நடந்தது. அதன்பிறகு அண்ணாத்துரை முதலமைச்சராக இருந்தபோது 1968-ஆம் ஆண்டு இண்டாவது உலக தமிழ்மாநாடும் மூன்றாவது உலக தமிழ் மாநாடு 1970-ஆம் ஆண்டில் பாரீசிலும், நான்காவது உலக தமிழ்மாநாடு யாழ்பாணத்திலும், ஐந்தாவது உலக தமிழ்மாநாடு மதுரையில் 1981-ஆம் ஆண்டிலும் நடந்தது. ஆறாவது மாநாடு 1987-ஆம் ஆண்டு கோலாலம்பூரிலும், ஏழாவது மாநாடு 1989-ஆம் ஆண்டில் மொரிசியஸிலும், எட்டாவது மாநாடு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 1995-ஆம் ஆண்டு தஞ்சாவூரிலும் நடந்தது.

எட்டாவது மாநாடு நடைபெற்று 14 ஆண்டுகள் கழித்து ஒன்பதாவது மாநாடு 2010-ஆம் ஆண்டு கோவையில் நடத்த முதலமைச்சராக இருந்த கருணாநிதி முடிவு செய்தார். அப்போது உலக தமிழ் மாநாட்டை நடத்த போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்தது. அதனால், அந்த மாநாட்டை உலக செம்மொழி மாநாடாக கோவையில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி நடத்தி முடித்தார். 

அதன்பிறகு ஒன்பதாவது மாநாடு கோலாலம்பூரில் 2015-ஆம் ஆண்டு நடந்தது.

இதைதொடர்ந்து 10வது உலக தமிழ் மாநாடு நடத்தப்பட வேண்டும். இந்த மாநாடு 2019-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பே 2018-ஆம் ஆண்டே  நடத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும், அந்த மாநாட்டை மதுரையில் நடத்தவும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது கடைசியாக மதுரையில் உலக தமிழ் மாநாடு நடந்தது. 9வது உலக தமிழ்நாடு தற்போது கோலாலம்பூரில் நடந்தாலும் அந்த மாட்டை உலக தமிழ்மாநாடாக தமிழ் அறிஞர்கள் பலர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஆனாலும், அது 9வது மாநாடாக கருதப்படுகிறது.

அதனால், 10வது மாநாட்டை மதுரையில் நடத்த முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆலோசிக்கின்றனர். ஏற்கணவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மதுரைக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் தமிழன்னை சிலை அமைக்கும் திட்டத்தை அறிவித்து இருந்தார். மதுரையில் உலக தமிழ்மாநாடு நடத்தும்போது இந்த இந்த சிலையை அமைத்து திறக்கவும் தமிழக அரசு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

அதனால், தமிழன்னை சிலை திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறுவது தவறு. 2019-ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு நடத்துவதற்கு இன்னும் ஒரு ஆண்டிற்கு மேல் காலஅவகாசம் இருப்பதால், மாநாடு ஏற்பாடுகளையும், சிலை அமைக்கும் பணிகளையும், முடித்துவிடலாம். இந்த மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்களையும் ஒருங்கிணைத்து, அவர்களையும் வரவழைக்கலாம் என்பது தமிழக அரசு திட்டமாக இருக்கிறது, ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x