மதுரையில் காதில் பூ வைத்து நூதனமான முறையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் போராட்டம்

மதுரையில் காதில் பூ வைத்து நூதனமான முறையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் போராட்டம்
Updated on
1 min read

மதுரை: மதுரையில் இன்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நூதன முறையில் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன்படி இன்று மதுரையில் காதில் பூ வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்பிரேமானந்தி முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் கல்யாணசுந்தரம், மாவட்டச்செயலாளர் பரமேஸ்வரன், ஐசிடிசி மாநில பொதுச்செயலாளர் வாசுகி ஆகியோர் பேசினர். இதில், ஆசிரியர் சங்க சரவணன், டான்சாக் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்ணன், நெடுஞ்சாலைத்துறை சங்க நிர்வாகிகள் மாரி, அன்பு, முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in