Published : 30 Dec 2017 10:09 AM
Last Updated : 30 Dec 2017 10:09 AM

ஆவடி விமானப்படை தளத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

ஆவடி விமானப்படைத் தளத்தில் பயிற்சி முடித்த டெக்னீஷியன்கள் மற்றும் விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னையை அடுத்த ஆவடியில் இந்திய விமானப்படைத் தளம் உள்ளது. இங்கு விமானப்படையில் புதிதாகச் சேரும் காவலர்கள் மற்றும் டெக்னீஷியன் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சியில் சேர்ந்த 320 காவலர்கள் மற்றும் டெக்னீஷியன்களின் பயிற்சி நிறைவடைந்ததை முன்னிட்டு அவர்களுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று நடைபெற்றது.

ஆந்திர மாநிலம், ஐதராபாதில் உள்ள பேகம்பட் விமானப்படைத் தளத்தின் அதிகாரி ஏர் கமோடோர் சி.கே.குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இங்கு பயிற்சி முடித்துவிட்டுப் பணியில் சேர உள்ள ஒவ்வொரு வீரரின் மீதும் இந்த நாடு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.

மாறி வரும் நவீன மாற்றத்துக்கு ஏற்ப வீரர்கள் அனைவரும் தங்களுடைய அறிவையும், திறமையையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், இப்பணியின் புனிதத் தன்மையை தங்கள் வாழ்நாள் முழுவதும் கட்டிக் காக்க வேண்டும்’ என்றார்.

பயிற்சியின்போது டெக்னீஷியன் பிரிவில் சிறந்து விளங்கியதற்காக சாக்கெட் பரத்வாஜ் என்ற வீரருக்கும், காவலர் பிரிவில் சிறந்து விளங்கியதற்காக சுபம் விஷ்வகர்மா என்ற வீரருக்கும், அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கியதற்காக சயீப் ஆலம் அன்சாரி ஆகிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, வீரர்களின் கண்கவரும் பல்வேறு சாகச நிகழ்ச்சி கள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், விமானப்படைத் தளத்தின் மெக்கானிக்கல் தொழில்நுட்ப பயிற்சி மையத் தின் அதிகாரி அருண் ஹர்டிஸ், விமானப்படை காவல் மற்றும் பாதுகாப்புப் பயிற்சி மையத்தின் அதிகாரி ஏகா ஸ்வரூப் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x