

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் பராமரிப்புப் பணியின்போது 14 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக சேப்பாக்கம் மைதானத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன. இந்தப் பணியில், மதுரவாயலைச் சேர்ந்த முருகன் (52) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மைதானத்தில் வெல்டிங் வேலை செய்த போது, எதிர்பாராத விதமாக 14 அடி உயரத்தில் இருந்து முருகன் கீழே விழுந்தார். இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், முருகன் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.