சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன்: உதயநிதி உறுதி

சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன்: உதயநிதி உறுதி
Updated on
1 min read

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சிபெற்ற 1,200 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளேன். மக்களைவைத் தேர்தலை திமுகவோடு யார் போட்டி என்பதில்தான் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் போய் பார்க்கிறாரா என்பது தெரியவில்லை. மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும்போது நமது மாநிலத்தில் சாதிய பாகுபாடுகள் குறைவுதான். இங்கு இல்லைஎன்று சொல்ல மாட்டேன்.

இருந்தாலும், ஆளுநர் அவரது வேலையை பார்க்காமல் தேவையில்லாத அரசியலை பேசி கொண்டிருக்கிறார். சனாதனத்தை பற்றியும் நான் தொடர்ந்து பேசுவேன். பேசிக்கொண்டே இருப்பேன். சனாதனம் பற்றி பெரியார், அம்பேத்கர், அண்ணாவைவிட நான் ஒன்றும் பேசிவிடவில்லை. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் சிஏஜி அறிக்கை பற்றி பேசுவோம்.

ஆசிரியர்கள் போராட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். நிதி நிலையை பொறுத்து முதல்வர் நிச்சயமாக ஆசிரியர்களின் கோரிக்கையை தீர்த்து வைப்பார். பள்ளிக்கூடங்கள் எல்லாம் திறந்துவிட்ட நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in