அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமலாகுமா? - தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமலாகுமா? - தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: கடலோரக் கிராமங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய மனுவுக்கு தமிழகஅரசு பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுஉள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேசில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களில் செயல்படும், அரசு உதவிபெறும்பள்ளிகளில் அமல்படுத்தப்படவில்லை.

வறுமையில் வாடும் மீனவர்கள்: மீனவ மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இயற்கைச் சீற்றம், சுற்றுச்சூழல் காரணமாக மீன்பிடித் தொழில் சிறப்பாக நடைபெறவில்லை. வறுமையால் மீனவக் குடும்பங்களை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் படிப்பைத் தொடர முடியாமல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

கடலோரக் கிராமங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சிறுவர், சிறுமிகள் பள்ளிக்குச் செல்லும் சூழல் ஏற்படும். எனவே, கடலோரக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “காலை உணவுத் திட்டம் அரசுப்பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது” என்றார். பின்னர், மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in