Published : 30 Dec 2017 01:48 PM
Last Updated : 30 Dec 2017 01:48 PM

பிரசவ கால இறப்பு விகிதம்; தேசிய அளவில் தமிழகத்தில் அதிகம்: திருநாவுக்கரசர் அதிர்ச்சி

தமிழகத்தில் பிரசவ காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் தேசிய அளவை விட அதிகரித்துள்ளது, குறிப்பாக சென்னையில் இது அதிகம் நிகழ்கிறது. இதற்கு ஆட்சியாளர்களின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை:

“தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஆட்சியை வழிநடத்த வேண்டிய முதல்வர் ஆட்சியை தக்க வைப்பதற்கு பெரும்பாலான நேரத்தை செலவழிக்கிறார்.

தமது ஆட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்கிற பொறுப்பை செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது.

சமீபத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் ஆய்வறிக்கையின்படி தமிழகத்தில் சுகாதார நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதை படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள தகவலின்படி பேரு கால இறப்பு விகிதம் (mother mortality rate MMR) தேசிய சராசரியை விட கடந்த ஐந்தாண்டுகளில் 80 சதவீதம் உயர்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இது அதிகரித்திருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது.

இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுகிற சென்னை மாநகரத்தில் பேரு கால இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது குறித்து யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. பேரு கால இறப்பு விகிதம் என்பது ஒரு லட்சம் பிரசவத்தில் எத்தனை தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது.

அதன்படி பேரு கால இறப்பு விகிதம் 2016 ஆம் ஆண்டில் 51.52 ஆக இருந்தது 2017 ஆம் ஆண்டில் 62.92 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சென்னையில் 52 ஆக இருந்தது 63 ஆக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் இதன் விகிதம் தமிழ்நாட்டில் 523 ஆகவும், சென்னையில் 37 ஆகவும் இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்கள் தமிழக சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இந்த புள்ளி விவரங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. அடிப்படை சுகாதார வசதி என்பது ஏழைகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும் கிடைப்பது அரிதாகவே உள்ளது.

சாதாரண மக்களின் அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில் கார்ப்பரேட் மருத்துவ சேவைகள் அதிமுக அரசின் உதவியுடன் அசூர வேகத்தில் உயர்ந்து வருகின்றன. இத்தகைய போக்கை தடுத்து நிறுத்துவது குறித்து அதிமுக ஆட்சியில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் வளமான தமிழகத்தை காண்பதாக கூறுவது மக்களை ஏமாற்றுகிற மோசடித்தனமான செயலாகவே கருத வேண்டும்.

எனவே, தமிழக அரசு, தேசிய சுகாதார இயக்கம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றங்களை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x