

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மீண்டும் முளைத்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது 4 நாட்கள் பெய்த மழையால், தோவாளை, நாவல்காடு பகுதிகளில் அறுவடைப் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர், பயன் தரும் நேரத்தில் வீணாகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் மழை நேற்று நின்றுள்ளது.
வெயில் தலைகாட்டியது. நீரில் மூழ்கியிருந்த வயல்களில் தண்ணீரை வடிய வைத்து, மூழ்கியிருந்த நெற்பயிர்களை முடிந்த அளவு விவசாயிகள் நேற்று அறுவடை செய்தனர். ஆனால் நெல்மணிகள் மீண்டும் முளைத்திருந்தன. அதுபோல், வைக்கோல் 4 நாட்களாக நனைந்திருந்ததால் கால்நடைகளுக்கு தீவனத்துக்கு பயன்படுத்த முடியவில்லை.
மழையால் மூழ்கி வீணாகிய நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.