148 பெண்கள், 2 திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோக்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

148 பெண்கள், 2 திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோக்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: அமைப்புசாரா ஓட்டுநர்கள், மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 148 பெண்கள், 2 திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆட்டோக்கள், தொழில்முறை டாக்ஸி ஆகிய வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

‘தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள், மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றபெண் ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பை உருவாக்கி, வருமானம்,வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் 2022-23-ம்ஆண்டுக்கான தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் கடந்தஜூலை 10-ம் தேதி 10 பெண் பயனாளிகளுக்கு புதிய ஆட்டோவுக்கான பதிவு ஆவணங்கள், அனுமதி ஆவணங்களை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். திருநங்கை ஓட்டுநர்களுக்கும் இந்த மானியத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக ஆக.15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்தார். மின்சாரம், சிஎன்ஜி, எல்பிஜியில் இயங்கும் ஆட்டோ மட்டுமின்றி, தொழில்முறை டாக்ஸி வாங்குவது மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கும் இத்திட்டத்தை நீட்டித்து ஆக.16-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்த விழாவில், ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ், 148 பெண் ஓட்டுநர்கள், 2 திருநங்கை ஓட்டுநர்கள் வாங்கியுள்ள புதிய ஆட்டோ, தொழில்முறை டாக்ஸி ஆகிய வாகனங்களை, முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவர்களிடம் வழங்கினார். அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சி.வி.கணேசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர்மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏஎம்வி பிரபாகர ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in