

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவும் இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம்கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 3,122 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1,560 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் 35.38 அடி, இருப்பு 9.83 டிஎம்சி.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
தற்போது, கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் அணைக்கு 11,800, கபினிக்கு 5,481 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு விநாடிக்கு 2,592 கனஅடிநீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், தற்போது நீர்வரத்து குறைவாகவும், நீர் திறப்பு அதிகமாகவும் இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2017 ஜனவரி 24-ம் தேதி 35.01 அடியாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அணை நீர்மட்டம் 35.38 அடியாக சரிந்துள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், வரும் 8 அல்லது 9-ம் தேதி வரைதண்ணீர்விட முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டுக்காக அதிகபட்சம் 9 டிஎம்சியும், குறைந்தபட்சம் 4 டிஎம்சியும் இருப்பு வைக்க வேண்டும். குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து குறைந்தபட்சம் விநாடிக்கு 500 கனஅடி, அதிகபட்சம் 2,000 கனஅடிவரை தண்ணீர் திறக்கப்படும்” என்றனர்.
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.