போச்சம்பள்ளி கொத்தகோட்டை கிராமத்தில் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

கோவிந்தராஜின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள்.
கோவிந்தராஜின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கெண்டி காம்பட்டி கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (30). இவர் மத்தூரில் உள்ள இனிப்பகத்தில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30-ம் தேதி மாலை 6.15 மணியளவில் அதே பகுதியில் உள்ள சமத்துவபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அவர் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் கோவிந்த ராஜ் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். தொடர்ந்து, கோவிந்த ராஜின் இருதயம், சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் ஓசூர் காவேரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மற்றொன்று கோவை மருத்துவக் கல்லூரிக்கும் தானமாக அளிக்கப்பட்டன. நேற்று அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

கொத்தகோட்டை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில், கோட்டாட்சியர் பாபு, வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in