

சென்னை: காந்தி ஜெயந்தி, தீபாவளியை முன்னிட்டு, சென்னை காதி பவனில் தள்ளுபடி விற்பனையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து, ரூ.6 ஆயிரத்துக்கு பொருட்களை வாங்கினார்.
காந்தி ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விற்பனையை தொடங்கி வைத்தார். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டார்.
`காந்திய சிந்தனை' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ஆளுநர் வழங்கினார். பின்னர், எஸ்ஆர்எஸ் சர்வோதயா விடுதிமாணவிகளுக்கு இலவச ஆடைகளை வழங்கினார். திருவையாறு பகுதியை சேர்ந்த சுரேஷ் பிரகாஷ் என்பவர் முதல் நபராக தள்ளுபடி விலையில் ரூ.1.75 லட்சம் மதிப்பில் பொருட்களை வாங்கினார். ஆளுநரும், சோப் வகைகள் உட்பட ரூ.6 ஆயிரம் மதிப்பில் பொருட்களை வாங்கினார்.
ரூ.26 கோடி விற்பனை இலக்கு: தமிழக கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குநர் பி.என்.சுரேஷ், காதி கிராமோத்யோக் பவன் தலைவர் ச.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காதி கிராமோத்யோக் பவன் செயலாளர் இளங்கோவன் கூறும்போது, “கடந்த 2021-22-ல் ரூ.19.09 கோடியாக இருந்த விற்பனை 2022-23-ல் ரூ.23.67 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ரூ.26 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.