Published : 03 Oct 2023 06:45 AM
Last Updated : 03 Oct 2023 06:45 AM

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 4 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை: இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மாதவரம் பால் பண்ணை- மாதவரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் 1,380 மீட்டர் தொலைவுக்குசுரங்கப்பாதை அமைக்கப்பட்டுஉள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவதுமாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை(45.4 கி.மீ.) 3-வது வழித்தடம்,கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம்,மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை(44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், 43 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைத்து, 48 ரயில்நிலையங்கள் அமைக்கப்படஉள்ளன. அதிகபட்சமாக மாதவரம் – சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது. மாதவரத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

3-வது வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் சுரங்கப்பாதை பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கலங்கரை-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்தமாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 4 கி.மீ. வரை சுரங்கப்பாதை பணி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

இரண்டாம் கட்ட திட்டத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, தற்போது 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரையில் 4,333 மீட்டர் அதாவது,4 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளது. ஒவ்வொரு சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரமும், தினமும்10 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதையை அமைக்கின்றன. அந்தவகையில், மாதவரம் பால்பண்ணை-மாதவரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் அதிகபட்சமாக 1,380 மீட்டர் தொலைவுக்குசுரங்கப்பாதை அமைக்கப்பட்டுஉள்ளது.

மாதவரம் பால் பண்ணை-வேணுகோபால் நகர், பசுமை வழிச்சாலை –அடையாறு சந்திப்பு, கலங்கரை விளக்கம்–திருமயிலை, சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோரயிலுக்கான சுரங்கம் தோண்டும்பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்துக்கு மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது வரை 17 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தத் தயாராக உள்ளன. சுரங்கம் தோண்டும் பணிகள் அனைத்துமுடிந்து, வரும் 2028-ம் ஆண்டில் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x