கைகலப்பு, தற்கொலை முயற்சியுடன் நிறைவடைந்த கிராம சபை கூட்டங்கள் - திருப்பத்தூர் அருகே சலசலப்பு

கந்திலி அடுத்த சுந்தரம்பள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் 2 பேர் தாக்கிக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. (அடுத்த படம்) திருப்பத்தூர் அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மாரியப்பன்.
கந்திலி அடுத்த சுந்தரம்பள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் 2 பேர் தாக்கிக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. (அடுத்த படம்) திருப்பத்தூர் அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மாரியப்பன்.
Updated on
2 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 இடங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கைகலப்பு, தற்கொலை முயற்சியுடன் நிறைவடைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கந்திலி அடுத்த சுந்தரம்பள்ளி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில், 5 மற்றும் 7-வது வார்டில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் அடுக் கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மற்றும் மதன் ஆகியோருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு கட்டிப்புரண்டு அதிகாரிகள் மற்றும் பார்வையாளர் முன்னிலையில் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் பொதுமக்களை மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர் அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை விலக்கி விட்டு சமாதானம் செய்தனர். பிறகு, இருவரையும் தனித் தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தி தகராறை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

அதன் பிறகு, கிராம சபை கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்று அனைத்து தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாட்றாம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக் கோடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், காளியப்பன், கோபி ஆகியோர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இந்த பன்றிகளால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக கூறி பன்றிகளை வேறு இடத்துக்கு கொண்டு சென்று வளர்க்க வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், பன்றி வளர்ப்பவர்கள் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து, அதே பகுதியில் பன்றிகளை வளர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் கிராம சபை கூட்டத்தில் பன்றிகளை ஆட்கள் இல்லாத இடங்களில் கொண்டு சென்று வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த நேரத்தில் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் பன்றி வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து, தான் மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து தனக்குத் தானே ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் இருந்த டீசல் கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பிறகு, அங்கு கூடியிருந்த அரசு அலுவலர்கள் பன்றி வளர்ப்பவர்களை அழைத்து ஒரு நாள் கால அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள்ளாக பன்றிகளை ஏரிக்கோடி பகுதியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாரியப் பனிடம் நாட்றாம்பள்ளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in