

புதுச்சேரி: இரண்டு மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர் நினைவுநாள் முப்பெரும் நிகழ்வாக பாரதிதாசன் கல்லுாரி எதிரே இன்று நடந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேச தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் எம்பி வைத்திலிங்கம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அவர், "காந்தி நமக்கு பெற்றுத்தந்த சுதந்திரம் மோடி ஆட்சியில் காணாமல் போய்விட்டது. புதிய கல்விக் கொள்கையில் மொழியை திணிக்கின்றனர். இந்தி படிக்கும்படி கூறுகின்றனர். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். அப்போது தான் சுதந்திரமான இந்தியா செயல்படும். அனைவரும் இதற்காக நாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "மோடி ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தேவையற்ற, அவசியமற்ற திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு செலவு செய்கிறது. பணத்தை சுய விளம்பரத்துக்காக மோடி செலவு செய்து ஆட்சி செய்கிறார். தற்போதைய அரசியல் சூழலில் உத்திர பிரதேசம், குஜராத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. தொகுதிகளை விட்டுக் கொடுத்து இண்டியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். யார் வேண்டுமானாலும் பிரதமராக இருக்கலாம். காங்கிரஸ் கட்சிதான் முதன்மையான கட்சியாக இருக்கும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். புதுச்சேரியில் ஊழல் மலிந்த ஆட்சி நடந்து வருகிறது. நாற்காலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு பொம்மை முதல்வராக ரங்கசாமி செயல்படுகிறார். முதல்வர் இல்லாமல் விழாக்களுக்கு ஆளுநர்தான் வருகிறார். யார் முதல்வர் என தெரியாத நிலை உள்ளது. வெளி நாடுகளில் முதலீடு செய்ய அமைச்சர்கள் சென்றுள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. முக்கியமாக ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியுள்ளது. அதிமுக வெளியேறியதை பற்றி கேட்டால், கூட்டணி பலமாக உள்ளதாக ரங்கசாமி சொல்கிறார். இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு (காங்கிரஸ்) சாதகமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.