Published : 15 Dec 2017 02:01 PM
Last Updated : 15 Dec 2017 02:01 PM

நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் ராஜஸ்தானில் கைது

 ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி மீது தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்ற போது போலீஸாரை செங்கற்கள், இரும்புக் கம்பிகளால் தாக்கிய கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொளத்தூரில் முகேஷ் என்பவருக்குச் சொந்தமான மஹாலட்சுமி நகைக்கடையில் மேற்கூரையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சௌத்ரி ராஜஸ்தானுக்கு தப்பிவிட அவர்களை தேடிச்சென்ற தனிப்படையினர் நாதுராமின் தந்தை உள்ளிட்ட குற்றத்துக்கு உடந்தையாக இருந்த சிலரைப்பிடித்து வந்தனர்.

மேலும் நாதுராமை பிடிக்க சென்னையிலிருந்து இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி, முனிசேகர் தலைமையில் ஐந்துபேர் கொண்ட தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் மாவட்டம் பாலிக்கு சென்றனர்.

கொள்ளைக் கும்பலின் தலைவனான நாதுராம் மற்றும் மற்ற கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் அவர்களை சுற்றி வளைத்து செங்கற்களாலும் , இரும்புத்தடியாலும் ஒரு கும்பல் தாக்கியது. அவர்களிடம் சிக்கியதில் கல்லடிப்பட்ட போலீஸார் தடுமாறிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாதுராம் துப்பாக்கியால் பெரியபாண்டியை சுட்டுக்கொன்று தப்பித்துச்சென்றார்.

இதையடுத்து நாதுராமையும், அவரது கூட்டாளியான தினேஷ், சௌத்ரியையும், ராஜஸ்தானில் போலீஸார் தேடிவந்தனர். ஜோத்பூரில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற தினேஷ், சௌத்ரி நேற்று பிடிபட்டார்.

இந்நிலையில், நாதுராமை பிடிக்கச் சென்றபோது தமிழக போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நாதுராமின் முக்கிய கூட்டாளிகள், அவரது உறவினர்கள் ராஜஸ்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக போலீஸார் மீது தாக்குதல் நடத்திய செங்கல் சூளைக்கு சொந்தக்காரரான தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் இருவர் என நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் விரைவில் தமிழகம் அழைத்துவரப்படுவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x