விசிக சார்பில் டிச.23-ல் திருச்சியில் மாநாடு; மல்லிகார்ஜுன கார்கே, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திருமாவளவன் தகவல்

விசிக சார்பில் டிச.23-ல் திருச்சியில் மாநாடு; மல்லிகார்ஜுன கார்கே, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திருமாவளவன் தகவல்
Updated on
1 min read

சென்னை: விசிக சார்பில் திருச்சியில் டிச.23-ம் தேதி நடைபெறும் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பரந்துபட்ட அளவில் விசிக எழுச்சி பெற்றுள்ளது.

இந்தியா கூட்டணியின் ஓர் அங்கமாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வரும் டிச.23-ம் தேதி திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் விசிக பயணிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கட்சியின் 'தேர்தல் அரசியல் வெள்ளி விழாவாகவும்' கட்சி தலைமையின் அகவை அறுபது மணி விழா நிறைவு விழாவாகவும் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. மாநாட்டில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள்: இத்துடன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in