

உத்தண்டி/பூந்தமல்லி/காஞ்சி/கல்பாக்கம்: 2014-ம் ஆண்டு அக்.2-ம் தேதிமகாத்மா காந்தி பிறந்த நாளன்று‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் 9-ம் ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிசெங்கல்பட்டு மாவட்டம் உத்தண்டி, நயினார் குப்பம் மீனவ கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து தூய்மைப்பிரச்சார இயக்கத்தில் பங்கெடுத்தார். அப்போது, கடற்கரையில் அவர் அனைவருடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பின்னர் மச்ச நாராயணன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் ஆளுநர் ரவி தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதில் அவர்கள் காட்டும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டினார்.
அப்போது உத்தண்டி கிராம மக்கள் சார்பில் துண்டில் வளைவு, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமெனக் கோரி மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
முன்னதாக மக்கும் குப்பை தரம் பிரிப்பது, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பிரச்சினை போன்றவை குறித்து விருகம்பாக்கம், அண்ணாநகர் பகுதியில் இயங்கும் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர். பள்ளி சார்பில் 45 மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர்கள் விஜயலட்சுமி, கவுரிலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.எஸ்.சந்தோஷ்குமார் தலைமையில் ஏராளமான மாணவர்கள் இதில் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு டாக்டர்அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ஜே.எம்.வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பார்வை குறையுடையோர் பள்ளி: பூந்தமல்லி, கரையான்சாவடியில் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 77-வதுபட்டாலியன் பிரிவு சார்பில், பூந்தமல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை இயக்கம் நடைபெற்றது. அதே போல், வல்லூர் அனல் மின் நிலைய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் சார்பில், பழவேற்காடு கடற்கரையில் தூய்மை இயக்கம் நடைபெற்றது.
கல்பாக்கம் கடற்கரை: கல்பாக்கம் அணுவாற்றல் நகரிய ஊழியர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று தூய்மைப் பணிகள் நடைபெற்றன. மேலும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் வெங்கட்ராமன் ஆலோசனையின் பேரில், பொதுப் பணி நிறுவனத்தின் குழும இயக்குநர் வனஜா நாகராஜூ இப்பணிகளைத் தொடங்கிவைத்தார். 200-க்கும் மேற்பட்டோர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
திருக்காலிமேடு பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தை தூர்வாரி முறையாக பராமரிக்காததால் வளர்ந்துள்ள நாணல் புதர்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று ஈடுபட்டனர்.