அனைத்து மதங்களையும் நேசிக்கும் கட்சி காங்கிரஸ்: கே.எஸ். அழகிரி கருத்து

அனைத்து மதங்களையும் நேசிக்கும் கட்சி காங்கிரஸ்: கே.எஸ். அழகிரி கருத்து
Updated on
1 min read

திருவள்ளூர்: ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் வட்டார, நகர வாக்குச் சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நேற்று வானகரத்தில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பிக்களான உத்தம்குமார் ரெட்டி, ஜெயக்குமார், எம்எல்ஏக்களான அசன் மவுலானா, ராதாகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகர், திருவள்ளூர் வடக்கு மற்றும் ஆவடி மாநகர மாவட்ட தலைவர்களான தாஸ், யுவராஜ், முன்னாள் எம்எல்ஏ பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், வாக்காளர்கள் மத்தியில் எவ்வாறு பரப்புரை செய்யவேண்டும் உள்ளிட்டவை குறித்து, வாக்குச் சாவடி நிர்வாகிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில், கே.எஸ். அழகிரி பேசியதாவது: சனாதனத்துக்கு எதிராகப் பேசுவதை, இந்து மதத்துக்கு எதிராகப் பேசுவதாக சொல்கிறார்கள். அது தவறு. காங்கிரஸ், கடவுள் மற்றும் மத நம்பிக்கை உடைய அரசியல்கட்சி. அதற்காக மதம், சாதி, மொழியின் பெயரால் அரசியல் செய்யாது. காங்கிரஸ் எல்லா மதத்தையும் நேசிக்கிறது. இது இந்து மதத்துக்கு விரோதமான அரசியல் கட்சி அல்ல. நாங்கள் எல்லாம் இந்துக்கள். காங்கிரஸ் சீர்திருத்தமான இந்து மதத்தை முன்னிறுத்துகிறது; மக்கள் விரும்புகிற இந்து மதத்தை முன் நிறுத்துகிறது.

வாக்குச் சாவடி நிர்வாகிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில்தான், 2024-ல் ராகுல்காந்தி பிரதமர் நாற்காலியில் அமர இருக்கிறார். ராகுல்காந்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் இந்திய ஒற்றுமை பயணத்தால் பிரதமர் மோடி அச்சப்படுகிறார். அதனால்தான் ராகுல்காந்தியை, அவரது இல்லத்திலிருந்து வெளியேறச் செய்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in