டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 2,183 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் 2,183 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 1.43 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கொசுக்கள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மூலம் பரவும் பல்வேறு தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் தினமும் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,183 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களில் 1 லட்சத்து 42,978 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 1,434 பேருக்கு காய்ச்சலும், 1,340 பேருக்கு இருமல் மற்றும் சளி பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது. பாதிப்பு சற்று அதிகமாக இருந்ததால் 18 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சி சின்னவேடம்பட்டியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாச புரத்தில் நடந்த மருத்துவ முகாமை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டார். துணை மேயர் மு.மகேஷ் குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் தி. சி.செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேயர் பிரியா கூறும்போது, ‘‘சென்னையில் 15 மண்டலங்களில் மண்டலத்துக்கு தலா 3 இடங்கள் வீதம் 45 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. கடந்த ஜூன் முதல் இதுவரை 3,962 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 1,33,589 பேர் பயனடைந்துள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பற்றியும், ஏடிஸ் கொசு உற்பத்தி பற்றியும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், துண்டுபிரசுரங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in