Published : 01 Oct 2023 03:10 PM
Last Updated : 01 Oct 2023 03:10 PM

அதிமுக பிரிவதால் என்டிஏ கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படாது: அண்ணாமலை

அண்ணாமலை | கோப்புப்படம்

கோவை: "தமிழகத்தில் பாஜகவின் எழுச்சி எனக்கு தெரிகிறது. களத்தில் அதன் விளைவுகளை நான் பார்க்கிறேன். 57 சதவீத தமிழக வாக்காளர்கள் 36 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இவர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்கின்றனர். பாஜகவின் அரசியல் அவர்களைச் சார்ந்தது. அவர்களுடைய நலனைச் சார்ந்தது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக முறிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அரசியல் கட்சிகள் நிறுவனங்களைப் போன்றது அல்ல. கடந்த 30 ஆண்டுகளில் பாஜக பல விசயங்களைத் தாண்டி வந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் அதுபோலத்தான். அதனால், இதுதொடர்பாக தேசிய தலைமையில் இருந்து எந்த அறிக்கையும் கேட்கவில்லை, நானும் கொடுக்கவில்லை. என் மண் என் மக்கள் பயணத்தின் முதற்கட்டம் முடிந்து 3 நாட்கள் இடைவெளி இருந்தது. அதுகுறித்து டெல்லி சென்று விளக்கமாக எடுத்துக்கூறுவது வழக்கம். அடுத்து தமிழகம் வரும் யோகி ஆதித்யநாத் வருகைக்கான தேதியை முடிவு செய்ய வேண்டியிருந்தது.

அதனால், டெல்லி சென்று அதற்கான நேரத்தைப் பெற வேண்டும். அறிக்கை மூலம் விளக்கம் கேட்பதற்கு இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. இது அரசியல். ஒருவர் வருவதும், ஒருவர் பிரிந்து செல்வது அரசியலின் ஒருபகுதி. தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்கள் இருக்கிறது. இன்றைக்கு பாஜகவின் நோக்கம், கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். என் மண் என் மக்கள், பிரமதமாக மக்களைச் சென்றடைந்து கொண்டுள்ளது. எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கூட்டணி எப்படி இருக்கும்? என்டிஏவின் தன்மை தமிழகத்தில் எப்படியிருக்கும்? இதுகுறித்து எல்லாம் சம்பந்தப்பட்ட தலைவர் பேசுவார்கள்" என்றார்.

அப்போது அதிமுக தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமையும் என்று கூறப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இதனால், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு இல்லை. அரசியலைப் பொறுத்தவரை, சில விசயங்கள் வரப்பிரசாதமாக அமையும். சரித்திரம் என்ன கூறுகிறது என்றால், ஒரு விசயம் நடக்கும்போது அதன் உண்மைத்தன்மை தெரியாது. நடந்துமுடிந்த பிறகு திரும்பிப் பார்த்தால், அது சரித்திரமாகத் தோன்றும்.

சுதந்திரம் எங்களுக்கு வேண்டாம் என்று மலேசியாவால் கழுத்தைப் பிடித்து வெளியே துரத்தப்பட்ட ஒரு நாடு சிங்கப்பூர். இன்று சிங்கப்பூரின் ஜிடிபி என்ன? மலேசியாவுடன் எத்தனை மடங்கு இருக்கிறது. எனவே, திரும்பிப் பார்க்கும்போதுதான் உண்மைத்தன்மை தெரியும். எனக்கு களநிலவரத்தின் யதார்த்தத் தன்மை தெரிகிறது.

நான் எங்கேயும் உட்காருவது இல்லை. ஒரு நாளைக்கு 9 மணியில் இருந்து 10 மணி நேரம் களத்தில், தூசி மற்றும் வியர்வையுடன் மக்களுடன் இருக்கிறேன். களநிலவரம் தெரிகிறது. நான் உறுதியாக இருக்கிறேன். 2024 ஐ பொறுத்தவரை அதீத நம்பிக்கையுடன் இருக்கிறேன். தினந்தோறும் 25 ஆயிரம் பேரை 65 நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வாறு மக்களை பார்ப்பதே இல்லை. நான் தமிழக மக்களின் எண்ணத்தைப் பார்க்கிறேன். அதை என்னால் புரிந்துகொள்ள முடியும். 2024 தேர்தலில் நான் ஒரு எண்ணிக்கை சொல்லியிருக்கிறேன். நிச்சயமாக அந்த எண்ணிக்கையை பாஜக அடையும். சில இடங்களில் குறி வைத்தால், அது தப்பாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலை பாருங்கள்.

தமிழகத்தில் பாஜகவின் எழுச்சி எனக்கு தெரிகிறது. களத்தில் அதன் விளைவுகளை நான் பார்க்கிறேன். 57 சதவீத தமிழக வாக்காளர்கள் 36 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். எனவே, இதையெல்லாம் அரசியல் கட்சிகள் இணைத்துப் பார்க்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் இவற்றை எல்லாம் பார்க்க வேண்டும். இவர்கள் பேசுகின்ற மொழியே வேறு. இவர்கள் அனைவரும் டிவியே பார்ப்பது கிடையாது. இன்ஸ்டாகிராமில் வாழ்கின்றனர். இந்த டிவியில் இவ்வளவு கத்தி பார்ப்பவர்கள் வெறும் 4 சதவீதம் மட்டும்தான். ஊடக விவாதங்களைப் பார்ப்பவர்கள் 2.5 சதவீதம் பேர் மட்டும்தான். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அந்த 57 சதவீதம் பேர் வாழ்ந்து கொண்டுள்ளனர். பாஜகவின் அரசியல் அவர்களைச் சார்ந்தது. அவர்களுடைய நலனைச் சார்ந்தது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x