Published : 04 Dec 2017 01:10 PM
Last Updated : 04 Dec 2017 01:10 PM
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவதால் திமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திமுகவின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி மாநில சொற்பொழிவாளர் நெறிமுறைப்படுத்துதல் கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் எந்த விதக் குழப்பமுமின்றி முதலில் வேட்பாளரை திமுக அறிவித்தது. ஆனால் அதிமுக பல்வேறு குழப்பங்களுக்கிடையே வேட்பாளரை நிறுத்தியது. வேட்பாளரை அறிவிப்பதில் கூட அதிமுகவின் தோல்வி தெரிகிறது.
நடிகர் விஷால் போட்டியிடுவது திமுகவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக நிச்சயம் வெல்லும். அதிமுக ஆட்சி அகல வேண்டும் என அனைத்துக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. அந்த வகையில் வைகோ ஆதரவளித்தது வரவேற்கத்தக்கது என கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் கோவையில் சென்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் பேசுவது கண்டிக்கதக்கது. அதற்கு பயன்படுத்தும் நிதியை, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT