Published : 11 Dec 2017 03:34 PM
Last Updated : 11 Dec 2017 03:34 PM

சிறுமி சரிகா உயிரிழப்பு; டி.எம்.எஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

காஞ்சிபுரத்தில் சிறுநீரகத்துக்கான மேல் சிகிச்சைக்கு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து டி.எம்.எஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுநீர்க பாதிப்பிற்காக டயாலசிஸ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சரிகா. இவரது, உடல்நிலை மோசமடையவே மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் 7 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்ததால் சிறுமி உடல்நிலை மோசமடைந்தது. சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் போரூர் அருகே மாணவி சரிகா உயிரிழந்தார்.

சரிகா உயிரிழப்புக்கு ஆம்புலன்ஸ் தாமதமாக வந்தததாகக் கூறப்படுவது காரணமா? சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? சாமானிய மக்களுக்கு உடலுறுப்புத்தானம் எட்டாக்கனியாக உள்ளதே? போன்ற கேள்விகளை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் 'தி இந்த'ு தமிழ் இணையதளம் சார்பாக முன்வைத்தோம்.

அவர் கூறியதவது:

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சென்னைக்கு சிகிச்சைக்கு கொண்டுசெல்ல பரிந்துரைக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்?

ஆமாம், இது தொடர்பாக மூன்று அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். மூன்று விதத்தில் விசாரணை நடத்தப்படும்.

ஏனெனில், இது விபத்து இல்லை. அச்சிறுமி ஏற்கெனவே சிகிச்சையில்தான் இருந்துள்ளார். ஏன் இது அடுத்தக்கட்டமாக ஞாபகமூட்டல் மாதிரி செல்லவில்லை. இரண்டாவது இது எமர்ஜன்ஸி மாதிரி இல்லை. மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ஏன் வசதிகள் இல்லை?  மாவட்ட மருத்துவமனையில் இது போன்ற விவகாரங்களில் என்ன வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற நிலையிலும் விசாரணை நடக்கிறது.

காரணம் சரிகா சிகிச்சையில்தான் இருந்தார், பரிந்துரையில் தானே இங்க அனுப்புகிறார்கள், தாமதம் காரணமாக உயிரிழந்தார் என்றால் அதுவரை அவர் சிகிச்சையில் அந்த மருத்துவமனையில்தானே இருந்தார். அதில் என்ன பிரச்சனை வந்தது என்ற கோணத்திலும், மூன்றாவது 108-க்கு இது போன்ற பரிந்துரை வந்தபோது 10 வாகனங்கள் உள்ளன.

ஒரு வாகனம் இல்லாதபோது அடுத்த வாகனம் ஏன் வரவில்லை? உடனடியாக அரக்கோணம் அல்லது வேறு எங்கிருந்தாவது கொண்டு வந்திருக்க வேண்டும்? அந்த கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டி.எம்.எஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்.

15 வயது சிறுமி மாற்று சிறுநீரகம் இல்லாமல் உயிரிழக்கிறார். உறுப்பு மாற்று சிகிச்சைக்கு காத்திருப்பவர்கள் சிறிய வயதில் உயிரிழக்கும் நிலை உள்ளதே?

உறுப்பு மாற்று சிகிச்சைக்கு அவர்கள் ஏற்கெனவே பதிவு செய்திருக்க வேண்டும். அது என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லவா? இன்று போய் எங்களுக்கு சிறுநீரகம் வேண்டும் என்று கூற முடியாது அல்லவா? 1400 பேர் காத்திருக்கும் பட்டியலில் இருக்கும்போது வருடத்திற்கு 400 பேர் என்ற அளவில் செல்லும் நிலை உள்ளது. வருடத்திற்கு 170, 180 உடல்கள் கிடைக்கும்போது சற்று கடினமான விஷயமாகத்தான் உள்ளது. மாவட்ட மருத்துவ அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் நடவடிக்கை வரும்.

இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x