

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சென்னை, தேனாம்பேட்டை, ரத்னா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் காலை 11.20 மணி அளவில் காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம், அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான அரசியல் தலைவர்கள், வேளாண்மை, சுற்றுச்சூழல், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை முதல் அவரது உடல், அவரால் தொடங்கப்பட்ட சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது, எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் சவுமியா சுவாமிநாதன் உடனிருந்தார்.
தொடர்ந்து, கேரள மாநில அரசின் வேளாண் அமைச்சர் பி.பிரசாத், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
விவசாயிகள், மகளிர் குழுவினர்: மேலும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் தமிழக கடலோர மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட மகளிர் குழுக்கள், மீனவ அமைப்புகள், வேளாண் பொருட்கள் மற்றும் மீன்களில் இருந்து மதிப்புக்கூட்டுபொருட்களை தயாரித்து விற்கும் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின விவசாயிகள் உள்ளிட்டோரும் சுவாமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த சின்னதம்பி கூறும்போது, ‘‘கொல்லிமலை பகுதியில் அழிந்துபோன சிறுதானியங்களை மீட்டெடுத்தவர் சுவாமிநாதன். அப்பகுதி மக்களின் ஊட்டச்சத்து பாற்றாக்குறையை போக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் பாடுபட்டவர் அவர்’’ என்றார்.
புதுச்சேரி கிராமப்பகுதியை சேர்ந்த உஷாராணி கூறும்போது, "நாங்கள் விளைவிக்கும் பொருட்களின் விலை தெரியாமல் குறைந்த விலையில் விற்று வந்தோம். அதை சரியாக சந்தைப்படுத்தவும், மகளிர் குழுக்கள் அமைத்து மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து விற்கவும் உதவியர் சுவாமிநாதன். எங்கள் பகுதியில் பெண்களின் வாழ்வாதாரம் உயர அவரே காரணம்’’ என்றார்.
இன்று இறுதி ஊர்வலம்: மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதி ஊர்வலம், தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பகல் 12 மணியளவில் பெசன்ட்நகர் மயானத்தில் காவல் துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.