விவசாயிகள் வழக்கு: தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் வழக்கு: தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: கொள்ளிடம் தடுப்பணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகள் இழப்பீடு கோரிய வழக்கில் தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுவதற்காக கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு 2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கக் கோரி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுமானப் பணிக்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்து, விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி இழப்பீடு வழங்கப்படாததால் 3 மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களின் அப்போதைய ஆட்சியர்கள் ஆஜராகினர். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட இழப்பீடு வழங்காமல் விளை நிலங்களை கையகப்படுத்தியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், விவசாயிகள் இழப்பீடு பெறுவது ஜனநாயக உரிமை. இதனால் தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தற்போதைய ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை அக்.9-ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in