Published : 08 Dec 2017 09:52 AM
Last Updated : 08 Dec 2017 09:52 AM
ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மற்றும் லண்டன் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் விவரங்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவித்தேன் என்று அரசு மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணையம் சார்பில், குறிப்பிட்ட தேதிகளில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 22 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி விசாரணை ஆணையத்தில் பலரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் ஆணையத்தில் அளித்திருந்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு இடம்பெற்றிருந்தது. தன் முன்னிலையில்தான் கைரேகை பதிவு நடைபெற்றதாக அரசு மருத்துவர் பாலாஜி சாட்சி கையெழுத்திட்டிருந்தார். அதற்காக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவர் பாலாஜி, மற்றொரு அரசு மருத்துவர் தர்மராஜ் ஆகியோர் நேற்று நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
விசாரணைக்குப் பின் மருத்துவர் பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பாக விளக்கம் அளித்தேன். அது தொடர்பாக நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். வரும் 27-ம் தேதி மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறேன்” என்றார்.
வரும் 12-ம் தேதி மருத்துவர் ஷங்கர், 13-ம் தேதி ஜெ.தீபா, 14-ம் தேதி தீபக், 15-ம் தேதி மாதவன், 19-ம் தேதி மருத்துவர் மகேந்திரன், 20-ம் தேதி முன்னாள் தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் ஜோசப், 21-ம் தேதி முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT