Published : 16 Dec 2017 10:01 AM
Last Updated : 16 Dec 2017 10:01 AM

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு ஆட்சேபத்துக்கு ஒப்புகை சான்று வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு: தேர்தல் விதியில் மாற்றம் செய்ய பரிந்துரை

உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவிப்போருக்கு, அது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒப்புகை சான்று அளிக்க வேண்டும். இதற்காக தேர்தல் விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாததால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாத வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட வலியுறுத்தியும், வேட்புமனு பரிசீலனையின்போது யாராவது ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதற்கு ஒப்புகை சான்றிதழ் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரியும் மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாததால் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது என 4,772 பேர் தகுதியிழப்பு செய்யயப்பட்டுள்ளனர். இவர்களின் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக ஆட்சேபம் தெரிவிப்பவருக்கு ஒப்புகை சீட்டு வழங்க தேர்தல் சட்டத்தில் இடமில்லை எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு:

தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாததால் தகுதியிழப்பு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ளவர்கள் 3 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மனுதாரரின் முதல் கோரிக்கை மீது உத்தரவிட தேவையில்லை.

வேட்புமனு பரிசீலனையின்போது, வேட்புமனுவை ஏற்பதற்கு வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ ஆட்சேபம் தெரிவித்தால் அதற்கு தேர்தல் அதிகாரி ஒப்புகை கடிதம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒப்புகை கடிதம் வழங்கினால் தேர்தல் வழக்கு விசாரணையின்போது அதை ஆதாரமாக காட்டலாம் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்று ஒப்புகை கடிதம் வழங்குவதற்கு தற்போதைய தேர்தல் விதிகளில் இடமில்லை.

எனவே, வேட்புமனு பரிசீலனையின்போது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டால் அதற்கு தேர்தல் அதிகாரி ஒப்புகை கடிதம் வழங்கும் வகையில் வேட்புமனு பரிசீலனை விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். இந்த திருத்தம் வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x