

சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவனிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்தனர்.
விசிக தலைவர் திருமாவளவனுக்கு கடந்த 25-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், செப்.30-ம் தேதி வரை திருமாவளவனை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்: இதற்கிடையே, திருமாவளவனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் திருமாவளவனிடம் தொலைபேசி வாயிலாக நேற்று நலம் விசாரித்தனர்.
திருமாவளவன் விரைவில் நலம்பெற்று திரும்ப வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.