கோடநாடு வழக்கில் தனபாலிடம் 2-வது முறையாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை

கோடநாடு வழக்கில் தனபாலிடம் 2-வது முறையாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை
Updated on
1 min read

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் விசாரணைக்காக நேற்று 2-வது முறையாக சிபிசிஐடி போலீஸார் முன்பு ஆஜரானார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இச்சம்பவத்தின்போது, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தடயங்களை அழித்ததாக உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவரிடம் கோவை சிபிசிஐடி போலீஸார், கடந்த 14-ம் தேதி விசாரணை நடத்தினர். அதன் பின்னர், 26-ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் தனபால் நேற்று ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். தனபால் சமீபத்தில் அளித்த கருத்துகளின் அடிப்படையில் அவரிடம் கேட்பதற்கான கேள்விகளை போலீஸார் முன்னரே தயாரித்து வைத்திருந்தனர்.

அதனடிப்படையில் தனபாலிடம் கேள்விகளை கேட்டு போலீஸார் விசாரித்தனர். அவர் தெரிவித்த பதில்களை போலீஸார் வீடியோ பதிவு செய்தனர். காலை தொடங்கிய விசாரணை மாலை நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in