நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினால் மற்றவர்கள் பயப்படுவார்கள்: உயர் நீதிமன்றம் கருத்து

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினால் மற்றவர்கள் பயப்படுவார்கள்: உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

மதுரை: ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினால் தான் மற்றவர்கள் பயப்படுவார்கள்’ என உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் கூறினார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவஞானம், உயர் நீதிமன்ற கிளையில் 2021-ல் தாக்கல் செய்த மனுவில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2014-ல் உடல் நலக்குறைவுக்காக பெங்களூர் தனியாரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இதற்கான மருத்துவ செலவு ரூ.9 லட்சத்தை காப்பீடு திட்டத்திலிருந்து வழங்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். என் மனு நிராகரிக்கப்பட்டது.

இதனால் 2017-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் எனக்கு மருத்துவக் காப்பீடு தொகையை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் இன்னும் எனக்குரிய மருத்துவ செலவு தொகையை வழங்கவில்லை. இதனால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. நெல்லை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நெடுமாறன் நேரில் ஆஜரானார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தொடர்பான ஆவணங்கள் தொலைந்துவிட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதி, அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணி டிக்கெட்டை தொலைத்துவிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். நடத்துனர் பயணச் சீட்டு பண்டலை தொலைத்து விட்டால் அவரை பணி நீக்கம் கூட செய்ய முடியும். ஆனால் மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்?.

இவரைப் போல் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும், இது மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். பணியில் உள்ள அரசு உயர் அதிகாரிகளை சரி செய்ய வேண்டியதுள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை செயல்படுத்த தங்கள் சொந்த பணத்தை செலவிடுவது போல் அதிகாரிகள் நினைத்துக் கொண்டு உள்ளனர். இந்த வழக்கில் ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in