நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு துணைபோக வேண்டாம்: அரசு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்
மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் துணைபோக வேண்டாம் என உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் கலைச்செல்வி.
இவர், உயர் நீதிமன்றக் கிளையில் 2019-ல் தாக்கல் செய்த மனு: அச்சம்பட்டி நடுநிலைப் பள்ளியில் 2001 முதல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். 2003-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தேன். என்னை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு, பதவி உயர்வு, நிலுவைத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால், 2021-ல் கலைச்செல்வி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை 3 மாதத்தில் நிறைவேற்றப்படும் என தொடக்கக் கல்வித் துறை இயக்குநராக இருந்த அறிவொளி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதன் பிறகும் நிறைவேற்றப்படாததால், கலைச்செல்வி மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.
இந்த மனு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவொளி நேரில் ஆஜரானார். அப்போது, மனுதாரரின் கோரிக்கை கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டதாக, அரசு வழக்கறிஞர் கூறினார்.
அப்போது நீதிபதி, மனுதாரர் 2019-ல் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, மனுதாரரின் கோரிக்கையை 3 மாதத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தும் உரிய காலத்தில் நிறைவேற்றப்படவில்லை. பள்ளிக் கல்வித் துறை இயக்குநரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் பேச வேண்டியதில்லை. அது அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தால், அதை நிறைவேற்றுவதுதான் அதிகாரிகளின் கடமை. இதில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் துணைபோக வேண்டாம் என்றார்.
பின்னர் நீதிபதி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவொளியிடம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத உங்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தவறுதான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன். இனி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவேன் என்றார்.
இதையடுத்து நீதிபதி, அறிவொளியின் மன்னிப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
